தம்

கல்லூரி நாட்களில் அந்த பருவத்திற்கே உரிய குறும்புகளும் ராவடிகளும் மனதில் எங்கேயோ பதிந்தே இருக்கும். 2ஆம் தேதி Benson & Hedges / More கழுதை தேய்ந்து வில்ஸ் பில்டர், கோல்ட் ப்ளேக், கத்தரி, கணேஷ் பீடி அளவு மாதக்கடைசி கட்டெறுப்பான கதை மாதாமாதம் நடக்கும் ஒரு சடங்கு. அது தவிர மாதக்கடைசியில் பாக்கெட் சாராயம் அடிக்கக்கூட வக்கில்லாமல் வயிற்றில் ஈரத்துணி கட்டி பிலிங்காய் லுக்கு விடும் நண்பர்களின் முகங்களை மறக்கத்தான் முடியுமா. அந்த சமயங்களில் வரும் எரிச்சல்கள், போலிச் சண்டைகள், ஜல்ஜாப்புகள் எல்லாம் இரவு உணவருந்திய பிறகு, நடிகைகளுக்கு மார்க் போடும்போதே மறந்துவிடும். பின் விடுதி மேசைதான் மோளம்... கானாவில் இருந்து காட்டுக்கத்தல்வரை எல்லாமே சங்கீதம்தான். யாரோவினுடைய அக்காளும் அம்மாளும் இரக்கமின்றி வாய் வதைக்கப்படுவர். அடுத்தநாள் காலை சித்தி விநாயகர் கோவிலுக்கு போகும் திட்டத்துடன் 20 பேரும் ஒரே அறையில் தண்ணீரை கண்டிராத போர்வைகளைப் போர்த்தி தூங்கிவிடுவதும் வாடிக்கை!

சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள்

Freedom is not worth having if it does not connote freedom to err - gandhi

ஒரு தவறு செய்வதைக்கூட மறுக்கும் சுதந்திரம் கிடைக்காமல் இருப்பதே மேல் - காந்தி



Citizen Kane

எத்தனையோ படங்களை இதுவரை பார்த்திருந்தாலும் என் மனதை விட்டு அகலாத ஒரு படம் உண்டென்றால் அது 'சிட்டிசன் கேன்' தான். படத்தின் கதை மட்டுமல்ல, காமெராக் கோணம் முதல், நிழல்களின் நாட்டியங்கள் வரை ஒரு சிற்பியின் நேர்த்தியோடு செதுக்கிய படம் இது. சமிபத்திய தசாவதாரம் படத்தில் முதற்காட்சியில் வரும் க்ராபிக்ஸ் ஷாட் மற்றும் முகுந்தா பாடலில் வரும் சிங்கிள் ஷாட் போன்ற பல கேமரா கோணங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிட்டிசன் கேன் நினைவிற்கு வந்துவிடும். மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் சகோதரிகள் ஆடிப்பாடும் ஒரு பாட்டிலும் அந்த உத்தி கையாளப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இப்போது பார்த்தாலும் ஒரு புதிய படத்தைபார்த்த கிறக்கம் எனக்கு போவதில்லை.

கீழே உள்ளது சில வருடங்களுக்கு முன் மரத்தடியிலும், ராயர் காபி கிளப்பிலும் எழுதிய விமர்சனம். என் சேமிப்பிற்காகவும், உங்கள் நுகர்வுக்காகவும் இந்த மறுபதிப்பு!

--------------------------------------------------------

சிட்டிசன் கேன் - Citizen Kane (1941)

விமர்சனம் : டைனோ

வாழ்க்கை ஒரு Jig-saw puzzleஐப் போன்றது. இறைந்து கிடக்கும்
உதிரிகளை ஒன்றோடு ஒன்றாக
இணைத்து விடுகதையின் பதிலை தேடி அலையும் ஒரு சிறு பயணமே
வாழ்க்கை. சிலருக்கு விடுகதையின் சூட்சுமம்
எளிதில் புரிந்துவிடுகிறது அதை பிறருக்கு எடுத்துசொல்லவும் முடிகிறது,
அவர்கள் இறைதூதர்கள், சிலருக்கு
சூட்சுமம் புரிந்தாலும் அதை அடையும் வழிதெரிவதில்லை அவர்கள்
ஞானிகள். பலருக்கு சூட்சுமமும் புரிவதி
ல்லை அதை புரிந்தவனிடம் கேட்கவும் மனமில்லை. சமூகம் என்ற
மாயையில் உழன்று வேடிக்கை மனிதனாய் வி
சும்பில் கரைகிறான். இரைந்து கிடக்கும் Jigsaw puzzleஇன்
பாகங்களை ஒழுங்குபடுத்தி ஒன்றோடு ஒன்றை
இணைத்தவுடன் காணக் கிடைக்கும் ஓவியத்தை பார்க்கையில் மனதில்
பரவும் அந்த மகிழ்ச்சியைக்
கொடுக்கும் "சிட்டிசன் கேன்" (Citizen Kane).

விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு ஜப்பானிய இயக்குனர் அகிரா
குரோசாவாவின் (Akira Kurusawa)
திரைக்கதை உத்தி (தமிழகத்தில்) பெரிதும் பேசப்படுகிறது. ஒரு
கதையை ஒன்றுக்கு மேற்பட்ட கதைசொல்லி
கள் மூலமாக விவரிப்பதுதான் அந்த உத்தி. கமலஹாசன் அதிலும்
கொஞ்சம் நவினத்தை(!) புகுத்தி, ஒரே
கதையை இருவர், அதுவும் ஒருவர் சொல்லாமல் விட்டதை மற்றவர்
கூறுவதைப்போல அமைத்து வெற்றிபெற்றிருக்கி
றார். இந்த உத்தியை பயன்படுத்தி 1950ல் குரோசாவாவின் புகழ்
பெற்ற ரஷோமான் (Rashomon) வெளி
யாவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே ஆர்சன் வெல்ஸ்(Orson
Welles)ன் 'சிட்டிசன் கேன்' வெளி
யாகி ஒரு தனிமனிதனின் ஆணவ பிடிவாதத்தால் RKO ஸ்டுடியோவின்
பெட்டிகளில் உறங்கிக்கொண்டிருந்தது.

புகழின் விளிம்பில் வாழ்ந்த ஒருவனின் தனிவாழ்க்கையின் வெற்றி
தோல்விகளை ஐந்து நபர்களின் மூலம் நமக்கு
விளக்கப்படுகிறது. கேனின் வங்கி காப்பாளன், காரியதரிசி, நண்பன்,
இரண்டாம் மனைவி,
சமையற்காரன்/காரியதரிசி ஆகியவர்களின் பார்வையில் கேன் என்ற
ஒரு பதிப்பு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின்
வாழ்க்கை புரட்டிபோடப்படுகிறது. இதைத்தவிர கேனின் இறப்பின் பின்
காண்பிக்கப்படும் குறுப்பட செய்தி
தொகுப்பு அவன் வாழ்க்கையை செய்திகளாக, தினத்தந்தி பெட்டி
செய்தியைப்போல எந்த சுயஉணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தாமல் ஒருவனின் பணபலத்தை பற்றிய பிரம்மிப்பை மட்டும்
வெளிப்படுத்தி முடிகிறது.

"உள்ளே நுழையாதே!" என்ற துறுபிடித்த அறிவிப்பு பலகை கம்பி
வேலிகளில் கட்டப்பட்டிருக்கிறது. வேலியின்
மத்தியில் மாபெரும் பிரம்மாண்டமான இரும்பு நுழைவுக்கதவு. கதவின்
உச்சியில் "K" என்ற எழுத்து. அதன் பி
ன்புறம் இருளில் ஒரு அரண்மனைக் கட்டிடம். இருளில் இருக்கும் அந்த
பிரம்மாண்ட கட்டிடத்தில்
ஒரே அறைமட்டும் வெளிச்சமூட்டப்பட்டிருக்கிறது. அறையினுள் படுக்கையில்
சாவின் கடைசி நொடியில் இருக்கும்
கேனின் கைகளில் ஒரு கண்ணாடி குடுவையில் பனி விழும் வீட்டு
அமைப்புகொண்ட ஒரு பொம்மை. கேனின் வாய்
மெல்ல திறந்து ஒரேஒரு வார்த்தையை உதிர்த்ததும் குடுவை கிழே
விழுந்து நொறுங்குகிறது. அதற்கே காத்தி
ருந்த நர்ஸ் கேனின் முகத்தை மூடி அவன் இறந்ததை உறுதி
செய்கிறாள். அவன் உதிர்த்த அந்த கடைசி
வார்த்தை 'ரோஸ் பட்' (R o s e B u d).

பனித்துகள்கள் எங்கும் கொட்டி இயற்கை விதவைக்கோலம் பூண்டிருந்த ஒரு
பனிக்கால காலை. ஒரு வீடு, அதன்
மேலுள்ள பலகை அது ஒரு தங்கும் விடுதி என்பதை
விளம்பரப்படுத்துகிறது. வீட்டிற்கு வெளியே சிறுவன் கேன்
தன் பனிச்சறுக்கு பலகையில் (Snow Sledge) விளையாடிக்கொண்டிருக்கிறான்.
விடுதியின் உள்ளே கேனின்
தாய் (விடுதியை பராமரிப்பவளும் அவளே) அவர்களுக்கு அதிருஷ்டத்தால்
வந்த குடும்ப சொத்துக்களை (தங்கச்
சுரங்கம்) வங்கி காப்பாளனிடம் ஒப்படைக்கிறாள், கூடவே தன்
மகனையும் அவன் மேற்பார்வையில் பராமரி
க்கும் படி கேட்கிறாள். கேனின் குடிகார தந்தை தடுத்தும்,
கேனின் அழுகையிடையிலும் அவன் பனிச்சறுக்கு
பலகை வீசப்பட்டு, காப்பாளனிடம் ஒப்படைக்கப்படுகிறான்.

தொழிற்துறையையும் தொழில் புரிவதற்கான விஷயங்களையும் வெளிநாடுகளில்
படித்து இளைஞனாக தன் இணைபிரி
யா நண்பன் ஜெடாடையாவுடன் (Jedediah) திரும்புகிறான் கேன்.
அத்தனை சொத்துக்களுக்கு அதிபதியான
கேன், செய்தித்தாள் நடத்துவதே தனக்கு ஆர்வம் என்று கூறி
நஷ்டத்தில் இயங்கும் ஒரு செய்தித்தாள் நி
றுவனத்தை வாங்குகிறான். செய்திகள் நிறுவன அலுவலகங்களை வந்து
சேரும்வரை காத்திருக்ககூடாது, செய்தி
களை நிருபர்கள் எதிர்பார்த்து அதை முனைப்புடன் அவர்களே சேகரித்து
கொண்டுவரவேண்டும், அவ்வாறு செய்தி
இல்லாத போது செய்திகளை உருவாக்க வேண்டும் என்று புதிய
கொள்கையை அறிமுகப்படுத்துகிறான்
கேன். அதுவே அவனின் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது.
செய்தித்தாள் வியாபாரம் முதலில் நஷ்டம்
ஏற்படுத்துகிறது, ஆனால், தான் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காத
குணத்தினாலும் வியாபார உத்தி
களாலும் வெற்றி பெறுகிறான் கேன். கேனின் வளர்ச்சி மற்ற பல
பத்திரிக்கை நிறுவனங்கள் மூடப்படுவதற்கு
காரணமாகிறது. ஆனாலும் வாழ்க்கையில் ஏதோ இழந்ததையே அவன்
மறக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதியின் உறவினப் பெண்ணான எமிலியை (Emily)
திருமணம் செய்துகொள்கிறான் கேன்.
ஆடம்பரமாய் துவங்குகிற அவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக
சிதிலமடைந்து உடைந்தும் போகிறது.
இங்கே அவர்களின் திருமண வாழ்க்கையை இயக்குனர் விவரிக்க
உபயோகப்படுத்து உத்தி கவனிப்புக்குரியது!
கேன் தன் பத்திரிக்கையில் தன் ஜனாதிபதி மாமனை
விமர்சிப்பதை எமிலியால் ஏற்கமுடிவதில்லை. அதனால்
கேன் தன் போக்கை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும் என்று எமிலி
வாதிக்கத்துவங்குகிறாள். கேன் அதை
மறுத்து தன் கண்ணோட்டத்தை விளக்குகிறார். விவாதம் நடைபெறும்போதே
இருவருக்கும் வயது கூடிக்கொண்டே
போவதையும், விவாதம் முடியும் போது இருவரும் எதிரெதிர்
நாற்காலியில் பேசாமல் உட்கார்ந்தி
ருப்பதைப்போலவும் ஒன்பது வருட திருமண வாழ்க்கை இந்த
சச்சரவிலேயே கழிந்ததை மிக நேர்த்தியுடன்
காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. விவாத முடிவில் எமிலி கேனின்
எதிரியாக கருதப்படும் மற்றோரு நிறுவனத்தி
ன் செய்தித்தாளை எமிலி படிப்பதுடன் காட்சி நிறைவுபெறுகிறது.
அதற்கு பிறகு இருவரும் அதிகம் பேசி
க்கொள்வது இல்லை!

சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சோகம் அவனை கட்டிப்போட்டு
விடவில்லை. தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி
க்கொண்டே போகிறான். ஒரு மழைநாளில் பல்வலிக்கு மருந்து
வாங்கவரும் சூசனை (Susan) சந்திக்க நேர்கி
றது. கேன் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்பதை
சூசன் அறியாமல் வெளிப்படையாக வெகுளியாக
பேசுவது கேனை மிகவும் கவர்கிறது. சூசன் தான் ஒரு ஓபெரா
(Opera) பாடகியாக வரவேண்டும் என தன்
தாய் விரும்புவதாகவும் அதுவே தன் லட்சியம் என்றும்
குறிப்பிடுகிறாள். சூசனுக்கு உண்மையில் ஓபெரா
பாடுவதற்கான குரல்வளம் வாய்த்திருக்கவில்லை. ஆனாலும் கேன் அவள்
குரலை சிலாகிக்கிறான். கேன் சூசனை
தன் இரண்டாம் மனைவியாக ஏற்கிறான். அவளுடைய கொடூரமான
குரலையும் தன் செய்தித்தாள்களில் புகழ்ந்து
எழுதச்சொல்கிறான். மற்ற ஓபெரா கூடங்கள் அவளுக்கு வாய்ப்பளிக்க
மறுத்ததால் அவன் மனைவிக்காக சி
காகோவில் ஒரு புதிய ஒபெரா கூடத்தையே நிறுவுகிறான் கேன்.
அவள் குரலை தன் நண்பன் ஜெடாடையாவை
கொண்டு புகழ்ந்து எழுதச்சொல்கிறான்.

ஜெடாடையாவுக்கு கேனின் இரண்டாம் திருமணத்தில் விருப்பமில்லை.
எமிலியுடன் ஜெடாடையா கொண்ட
நட்பும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதற்கிடையில் கேன்
நியுயார்க் மாநில கவர்னர் பதவி
தேர்தலில் சுயச்சையாக போட்டியிடுகிறான். ஜெடாடையாவின் கூரிய
அறிவினாலும் உதவியாலும் கேன் மக்களி
ன் மனதில் நிறைகிறான், ஆனால் எதிரணியில் போட்டியிடும்
வேட்பாளன் கேனுக்கு சூசனுடனிருக்கும்
கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தி அவன் வெற்றிவாய்ப்பை நிறுத்திவிடுகிறான்.
எமிலி கேனிடம் சூசனை துரத்தி
விடும்படி கூறியும் கேன் மறுப்பதால் எமிலி கேனைவிட்டு
பிரிகிறாள். தேர்தல் தோல்வியை ஏற்கமுடையாத
ஜெடாடையாவும் கேனிடம் கருத்து வேறுபாடு கொண்டு செய்தித்தாளின்
சிகாகோ பதிப்பிற்கு ஆசிரியனாய்
போய்விடுகிறான். இந்த சமயத்தில்தான் கேன் ஜெடாடையாவை சூசனின்
குரலை பாராட்டி எழுதசொல்கிறான்.
லட்சியத்தையும் பத்திரிக்கை தர்மத்திற்கும் எதிராக ஒரு பொய்
செய்தியை வெளியிட ஜெடாடையா
மறுப்பதால் அவனை நண்பனென்றும் பாராமல் பணிநீக்கம் செய்கிறான்
கேன். நட்புக்கு அடையாளமாக அவனுக்கு
ஒரு பெரிய உதவித்தொகையையும் அனுப்புகிறான் கேன், ஜெடாடையா
அதை மறுத்து திருப்பி அனுப்பிவிடுகி
றான்.

கேன் தன் கனவுக்கோட்டையான க்ஷனாடூ (Xanadu) என்ற அரண்மனையை
கட்டுகிறான். அது ஒரு அரண்மனை
என்று சொல்வதைக்காட்டிலும் ஒரு தனி நகரமென்றே சொல்லவேண்டும்.
உலகில் எல்லாப் பகுதிகளில்
இருந்தும் அரும்பொருட்களையும் கலை பொருட்களையும் வாங்கி தன்
அரண்மனையில் நிரப்புகிறான்.
கலைப்பொருட்கள் நிறைந்த அரண்மனையில் சூசன் தனியே பேசக்கூட
ஆள்துணையின்றி தவிக்கிறாள். கேன்
தன்னை அடிமைப்படுத்தி தன் வாழ்க்கையை தன் போக்கிற்கு வாழ
வற்புறுத்துவதாக சண்டையிடுகிறாள். கேன்
வீட்டில் இல்லாத போது பெரிய jig-saw puzzleல்களை இணைத்து
பொழுதைக்கழிக்கிறாள். வி
டுமுறைக்காக நண்பர்களோடு தன் உல்லாச விடுதியில் பொழுதைகழிக்கும்
ஓரு நன்நாளில் கேனிடம் சண்டையிட்டு
சூசனும் பிரிகிறாள். சூசன் தன்னைப் பிரிந்து செல்வதை
தாங்கிக்கொள்ள முடியாத கேன் தன் அறையில்
உள்ள அத்தனை பொருட்களையும் வீசி சேதாரப்படுத்துகிறான். அனைத்தையும்
சர்வ நாசம் செய்யும் அவன்,
ஒரு சிறிய கண்ணாடிக்குடுவையை மட்டும் கையில் எடுத்து செல்கிறான்.
குடுவைக்குள் பனிவிழும் வீடு
பொம்மை. அப்போது அவன் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தை
'ரோஸ் பட்'. அதை கேனுடைய
சமையற்காரன் கேட்டதாக பிறிதொரு சமயத்தில் கூறுகிறான்.

தனிமையின் சோகம் தன்னைத்துரத்த கேன் மிக விரைவில்
நோய்வாய்ப்படுகிறான். அரண்மனையில் தன் அறையி
ல் 'ரோஸ்பட்' என்ற அந்த வார்த்தையை கூறி இறக்கிறான் கேன்.

முன்னர் குறிப்பிட்ட குறும்படச்செய்தித்தொகுப்பாளன் அந்த வார்த்தையின்
அர்த்தம் தேடி கேனின் வாழ்வின் முக்கி
ய நபர்களை தேடிச்செல்கிறார். முதலில் கேன் தான் தொடர்பு
வைத்திருந்த பெண்களை அவ்வாறு அழைத்தி
ருக்கலாம் என்றே அவர்களை அணுகுகிறான். ஆனால் ஒவ்வொருவரும்
கேனின் வாழ்க்கையை விவரிக்கும்
போதும் அவன் வாழ்வின் மர்மம் கூடிக்கொண்டே போகிறதே ஒழிய
யாருக்கும் சரியான பதில் தெரிவதி
ல்லை. அவருடன் சேர்ந்து படம் பார்க்கும் நம்மையும் அந்த தேடலில்
இணைத்து அழைத்துச்செல்கிறார்
இயக்குனர்! கருப்பு வெள்ளை படத்தில் காட்சிகளின் ஆழம் நம்மை
வியப்படையச்செய்யும். காமி
ராக்கோணங்களும் ஒலியமைப்பும் (இயக்குனர்/கதாநாயகன் ஓர்சன் வெல்ஸ்
வானொலி நாடகம் நடத்தி
புகழ்பெற்றவர்) நடிப்புத்திறனும் (படத்தில் நடித்த நடிகர்கள் பலருக்கு
இதுவே முதல் படம்) கலை ஆக்கமும்
(அரண்மனை, ரயில்நிலையம், கேன் சேகரித்த கலைப்பொருட்கள், கேனின்
இளமைக்கால வீடு, நூலகம்) தி
ரைக்கதையும் (ஐந்து நபர்கள் கதையை தன் கண்ணோட்டத்தில் கூறுவது)
ஒப்பனையும் (ஒரு நடிகரே இளமைக்கால
கதாபாத்திரத்தையும் முதுமையடைந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது,
காலங்கள் மாறும்
போது அவர்களுடைய வயதும் முகச்சுறுக்கங்களும் மாறி வருவது)
அருமையான இயக்கமும் (ஓர்சன் வெல்சின் முதல்
படம்) படத்தொகுப்பும் (கேன் எமிலி வாக்குவாதம், கேன்
ஜெடாடையா உரையாடல்) ஒளிப்பதிவும் (கேனின்
கவர்னர் உரை, தாச்சர் நூலகம், க்ஷனாடூ அரண்மனைக்காட்சிகள்) என்று
அனைத்து விதத்திலும் நம்மை கடைசி
க்காட்சிவரை நம்மை கட்டிவத்துவிடுகிறார்கள்.

கேனின் இறப்பிற்கு பிறகு கேனின் கடனாளிகள் அவன் அரண்மனையை
வசப்படுத்திக்கொள்கின்றனர். கேனின்
கலைச்சேகரிப்பு மொத்தமும் பொட்டலம் கட்டப்பட்டு விற்பனைக்கு
தயார்படுத்துகிறார்கள். வேண்டாத
பொருட்களை அரண்மனை நெருப்புக்கூடத்தில் இட்டு கொளுத்துகின்றனர்.
கேனின் சேகரிப்பில் உள்ள
பொருட்களைக்கண்டு அதை எரிப்பவர்கள் கூட ஆச்சரியப்படுகின்றனர்.
செல்வந்தன் கேன் தென் சேமிப்பில் பைசா
பெறாத சிறிய பொருட்களும் அடக்கம். உபயோகமற்ற அட்டைப்பெட்டிகளும்
சரடுகளும் தீக்கிரையாக்கப்படுகி
றது. பணியாட்களில் ஒருவன் ஒரு பழைய மரப்பலகையை தீயினுள்
இடுகிறான். பாதி சிதிலமைந்த அந்த
மரப்பலகை சிறுவன் கேன் தன் தாயுடன் விடுதியில் இருந்த போது
பயன்படுத்திய பனிச்சறுக்குப்பலகை. எரியும்
பலகையில் முதலில் அதன் மீது ஒட்டியிருந்த குப்பைகள் எரிகின்றன,
அதையடுத்து அதில் எழுதப்பட்ட ஒரு
வார்த்தை சில விநாடிகள் தெரிந்து முழுவதும் மறைந்து விடுகிறது.
பலகையில் இருந்த அந்த வார்த்தை -
''ரோஸ்பட்" (R O S E B U D).

நடிப்பு : ஓர்சன் வெல்ஸ் (கேன்), யோசெப் காட்டன்
(ஜெடாடையா), டொரொத்தி காமிங்கோர் (சூசன்),
ரூத் வாரிக்(எமிலி)
இயக்கம் : ஓர்சன் வெல்ஸ்
திரைக்கதை : ஓர்சன் வெல்ஸ் / ஹெர்மன் மன்க்கிவிச்
(திரைக்கதைக்கான ஆஸ்கர் வென்றது)

-*_*-*_*-*_*-*_*-*_*-*_*-*_*-*_*-*_*

கதையின்கதை:

சிட்டிசன் கேன் ஒரு நிஜத்தின் நிழல். வில்லியம் ருண்டால்ப்
ஹெர்ஸ்ட் என்ற செய்தித்தாள் அதிபரின்
வாழ்க்கைச்சம்பவங்களின் நிழல் தொகுப்பே சிட்டிசன் கேன். தன்
வாழ்க்கை பிறரின் பார்வைக்கு காட்சி
பொருள் ஆவதை விரும்பாத ஹெர்ஸ்ட் இந்தப்படத்தை பல
விதங்களிலும் தடங்கல் ஏற்படுத்தினார். தன்
செல்வாக்கைப்பயன்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்திற்கு பண நெருக்கடி
ஏற்படுத்தினார். ஆனால் வெல்ஸ் தன்
சொந்த பணத்தை செலவிட்டு ஒருவாறு படத்தை முடித்தார். ஆனாலும்
திரையரங்குகளில் இப்படத்தை திரையி
டுவதற்கும் சிக்கல் உருவாக்கினார் ஹேர்ஸ்ட். அதனால் தயாரிப்பு
நிறுவனமான RKO பிக்சர்ஸ் பல பிரதிகளை
திரும்பப்பெற்றுக்கொண்டது. ஆஸ்கர் பரிசி வழங்குவதில் கூட ஹேர்ஸ்டின்
நெருக்கடியினால் வெல்சுக்கு
வழங்கப்படவில்லை என்றும் கூறினர். இந்த தடைகளை தாங்கிக்கொள்ள
முடியாத RKO, படத்தை பெட்டியில்
பூட்டிவிட்டு மறந்துபோய்விட்டிருந்தது. ஹேர்ஸ்டின் 1951ல் மறைந்த பிறகு
1953ல் ஐரோப்பிய திரப்படவிழாவி
ல் திரையிடப்பட்ட பிறகு சிட்டிசன் கேன் மீண்டும் பேசப்பட்டது.
இன்றளவும் சிறந்த உலகத்திரைப்படவரிசையி
ல் சிட்டிசன் கேன் முதல் இடத்தில் இருக்கிறது.

--
March 25, 2004

===

சிட்டிசன் கேன் சிங்கிள் ட்ராக்கிங் ஷாட்.

திறந்திடு சிசேம்!

சுமார் நான்கைந்தாண்டுகளுக்கு முன் திறவூற்று / பரி மென்பொருள் (Open source / free software) குறிந்த கீழ்கண்ட கட்டுரையை எழுதி மாலன் அவர்களின் திசைகள் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அடுத்த மாதமே அவருடைய மின்னிதழிலும் வெளியிட்டு சிறப்பித்தார். இதை மறுவாசிப்பு செய்தபோது பெரும்பான்னையான விடயங்கள் இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறே அமைந்திருப்பதாகப்பட்டது. எனது சேமிப்பிற்காகவும் உங்கள் நுகர்விற்காகவும் இக்கட்டுரையை வலையேற்றுகிறேன்.

*************************************************************************

03MAY04

திறந்திடு சீசேம் - திறவூற்று / பரி மென்பொருள் பற்றி எளிய அறிமுகம்
-------------------------------------------------------------------------------------
. : டைனோ : .

நாம் நிதமும் உபயோகிக்கும் கணினியில் ஒரு எழுத்தை தட்டச்சு செய்வதற்கும் திரையில் தெரிவதற்கும் இடைப்பட்ட ஒரு நுண் நொடியில் பல ஆயிரக்கணக்கான கட்டளைகள் இயக்கப்படுகின்றன. பல கணினிகள் கூட்டாய் இணைந்து செயல்படும் ஒரு வலைப்பின்னல் (network) தளத்தில் இந்த வேகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மென்பொருளின் வெற்றியை இந்த வேகமும், தொடர்ந்து குறையின்றி செயல்படும் தரக்கட்டுப்பாடுமே நிர்ணயம் செய்கிறது. இந்த வேகத்தை கூட்டவே இன்று பலநூறு கோடி டாலர்களை நிறுவனங்கள் வாரி இரைக்கிறார்கள். அதை திரும்பப்பெற வாடிக்கையாளரிடம், பல்லாயிரம் டாலர்களை வசூலித்தும் விடுகிறார்கள். ஆனாலும் பல நிறுவனங்களின் விற்பனையில் அவர்கள் சோதனைக்கும் தயாரிப்பிற்கும் செலவிடுவதைவிட பல்மடங்கு திரும்பப் பெற்றுவிடுகிறார்கள். மேலும் அந்த மென்பொருட்களுடன் அதற்கான சேவை ஒப்பந்தங்களையும் விற்றுவிடுகிறார்கள். ஐபிஎம், சன், மைக்ரோ ஸாப்ட் போன்ற நிறுவனங்களின் இந்த சேவை ஒப்பந்தங்களின் விலை மென்பொருளின் விலையைக்காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடுகிறது. இந்த சேவை ஒப்பந்தங்களே இன்று இந்த நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டித்தருகின்றன.

இன்று ஒரு கணினியை நாம் வாங்கினால், அதில் பாதிக்கு மேற்பட்ட பணம் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுகவேண்டியுள்ளது. 15 - 20 ஆண்டுகளுக்கு முன் கணினி மென்பொருட்களை சன், ஆப்பிள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களே தயாரிக்கமுடியும் என்ற நிலை இருந்தது. அப்படியே சிறிய நிறுவனங்கள் தயாரித்தாலும் அவர்களால் சந்தைப்படுத்தி விற்பனை செய்யவும் விளம்பரம் செய்யவும் போதிய பலமின்றி மடிந்தனர். அதையும் மீறி ஒருவாறாக வெற்றிபெற்ற சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் வாங்கி அவர்களின் வெற்றிகண்ட தொழில்நுட்பத்தை தங்கள் தயாரிப்பில் கூச்சமின்றி உபயோகிக்து வந்தனர். அதனால் ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு இந்த பெரிய சுறாக்களின் வாயில் அகப்பட்டு, வாடிக்கையாளர்களை சேர்ந்தடையாமல் அந்நிறுவனங்களின் தயவை எதிர்நோக்கும் நிலை வந்தது.

குவா... குவா... க்குனூ - Birth of GNU
------------------------------------------------

1980களின் கணினியின்பாலும், மென்பொருள் தயாரிப்பின்பாலும் கணினி ஆர்வலர்கள் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களாகவும் கணினியின் செயல்பாடுகளைக் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர்களாய் இருந்தனர். தங்களை கொந்தர்கள் (Hackers) என்று விளித்துக்கொள்வதில் பெருமை கொண்டிருந்தனர். (Hacker - One who programs enthusiastically even obsessively or who enjoys programming rather than just theorizing about programming). தங்களின் ஓய்வு நேரத்தில் கணினி குறித்த அறிவை பெருக்கிக்கொள்ள தாமே மென்பொருள் எழுதத்துவங்கினார்கள். தங்கள் நிறுவனம் உபயோகித்து ஒதுக்கிவைத்த கணினிகளில் தன் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத்துவங்கினர். அவர்களின் இந்த ஆர்வமே, 20 வருடங்களில் பில் கேட்ஸ் (Bill Gates), ஸ்காட் மெக்நீலி (Scott McNealy), ஸாம் பல்மிசானோ (Sam Palmisano) ஆகியோரின் தூக்கத்தை கெடுக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

தன்னிச்சையாய் அவரவர் வீட்டு பணிமனையிலும், அலுவலக ஓய்வுநேரத்திலும் இயங்கிவந்த இவர்களை 1985ல் ரிச்சார்ட் ஸ்டாள்மன் (Richard Stallman) துவங்கிய க்குனூ (GNU) இயக்கம் ஈர்த்தது (GNU - GNU is Not Unix என்பதன் சுருக்கம்). ரிச்சார்ட் தொன்மையும் பெருமையும் வாய்ந்த MIT சோதனைச்சாலையில் 1971ல் பணிபுரிந்த போதே அவர்மனதில் பரிமென்பொருள் தயாரிப்பதற்கான பொரி உருவாகிவிட்டதை நினைவுகூர்கிறார். அவரைப்பொருத்தமட்டில் மென்பொருள் நிரல் சமையற்குறிப்பைப் போன்றது. நாம் சமையற்குறிப்பை எவ்வாறு மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறோமோ, அதைப்போலவே நிரலையும் பகிரவேண்டும் என்ற எண்ணம் உடையவர். இந்த எண்ணமே அவரின் முயற்சியில் விழைந்த க்குனூ அமைப்பிற்கு ஆதார கொள்கை. இந்த கொள்கையால் ஈர்க்கப்பட்ட மற்ற கொந்தர்கள் க்குனூவுடன் இணைந்து செயல்படத்துவங்கினார்கள்.

முதலில் GNUவுக்கு ஒரு இயங்குதளத்தை (operating System) உருவாக்குவதே ரிச்சார்டின் முதற்பணியாக இருந்தது. அதற்கான முதல் முயற்சியாக தொகுப்பு செயலியை (Compiler) எழுதினார். ஆனாலும் க்குனூ வளர முக்கியக்காரணம் அவர்கள் தயாரித்த ஈமாக்ஸ் (EMacs) என்னும் பதிப்பு செயலியே ஆகும். இன்று நாம் உபயோகிக்கும் வோர்ட் (Word) , நோட்பாட் (Notepad) போன்ற செயலிகளை யுனிக்ஸ் இயங்குதளத்தில் அன்று இல்லை. யுனிக்ஸ் படமோ சித்திரங்களோ அற்ற வெறும் உரை கட்டளைகளை (text commands) கொண்டு செயல்படும் தளம். அதில் vi, ed போன்ற மிகவும் தொன்மையான வசதி குறைந்த செயலிகளையே இயக்கமுடியும். அதில் வெட்டி ஒட்டுவதற்கு வசதி கொண்ட ஈமாக்ஸ் அந்த பழைய செயலிகளைக்காட்டிலும் கவர்ச்சிகரமாய் காட்சியளித்தது. அந்த வெற்றிதான் க்குனூவிற்கு ஒரு முகவரி தந்தது. மென்பொருள் தயாரிப்பவர் க்குனூவின் பக்கம் தம் பார்வையை திருப்பத்துவங்கினர்.

சும்மா அல்ல, சுதந்திரம் - Free as in Freedom:
----------------------------------------------------------
க்குனூவின் இந்த வெற்றி 1985ல் பரி மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation - FSF) நிறுவ ஆதாரமாய் இருந்தது. இந்த அறக்கட்டளை ஆர்வலர்கள் பலரையும் தன்பால் ஈர்த்தது. பெரும் நிறுவனங்களின் பதுக்குக்குழியில் அகப்பட்டு, கூஜாவில் அடைப்பட்டிருந்த மென்பொருள் என்ற மாபெரும் சக்தி, முதன்முதலில் சாதாரண சுப்பனின் கையிலும் தவழ முடியும் என்ற நம்பிக்கை
ஒளிதீபம் சுடர்விட்டு பிராகாசித்தது. க்குனூ இயங்குதளத்தை யுனிக்ஸ் போன்ற ஒரு பலம் வாய்ந்த தளமாய் இலவசமாய் வெளியீடு செய்வதே அவர்களின் முதல் குறிக்கோள். ஈமாக்ஸ் பதிப்பு செயலியை வர்த்தக ரீதியாக விற்றதன் மூலமும், தொழிற்கூடங்கள் மற்றும் ஆர்வலர்களின் பணம், பொருள் நன்கொடைகளாலும் அறக்கட்டளை வளர்ந்தது. அன்று துவங்கிய அதன் பயணம் இன்று பல பெரும் நிறுவனங்களுக்கு ஈடாக, ஏன் அவர்களைக்காட்டிலும் தரமான தயாரிப்புகளை வெளியிட்டு அவர்களின் கண்களில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, Free என்று கூறிவிட்டு எப்படி வர்த்தக ரீதியாக விற்றார்கள் என்ற கேள்வி எழுகிறதுதானே. Free என்பது இலவசம் என்பதை குறிக்கவும் ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் சொல் என்பதால் சற்றே குழப்பமெற்படுவது சகஜமே. இங்கு free என்பது சுதந்திரம் என்ற பொருளில் வழங்கப்பட்டது. 'அடப்போய்யா... விடிய விடிய கத படிச்சிட்டு இதற்கும் காசு கொடுக்கணும்னா என்னத்த free?" என்றுதானே
நினைக்கிறீங்க. நிற்க! அதை விளக்கும் முன் FSFன் சித்தாந்தத்தை கொஞ்சம் பார்த்துவிடலாம்.

பரிமென்பொருள் என்பது உபயோகிப்பவனின் சுதந்திரத்தை வழியுறுத்துவது, அதை செயல்படுத்துவது FSFன் தலையாய கடமை. ஒரு மென்பொருள் உபயோகிப்பவனுக்கு இயக்குவதற்கும் (to run/execute), பிரதியெடுக்கவும் (to copy), வர்த்தக ரீதியாக பொட்டலம் கட்டி விற்கவும் (to distribute), மாற்றியமைக்கவும் (to change / modify), முன்னெடுத்துச் செல்லவும் (to improve) முழூ சுதந்திரத்தையும் உரிமையையும் தருகிறது. ஒரு பரி மென்பொருள் நான்கு வகை சுதந்திரங்களை ஒருவனுக்கு வழங்குகிறது.

அவை,

(அ) மென்பொருளை எந்த தளத்திலும் எந்த காரணத்திற்காகவும் இயக்கலாம்.
(எ.கா.) இதை விளக்க ஒரு சிறிய செய்தி. மைக்ரோசாப்டின் FAT ஆவண வகைப்படுத்தும் அமைப்பு முந்தைய தலைமுறை DOS இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. விண்டோஸ் புகழடையத்துவங்கியதும் மைக்ரோசாப்டே FATஐ மறந்துவிட்டது. ஆனால் இன்றைய நவீன காமிராக்களிலும், காம்கார்டர்களிலும் உபயோகிக்கும் நினைவகச் சிப்களில் இந்த அமைப்பை பயன்படுத்தத் துவங்கினார்கள். விடுவார்களா மைக்ரோ ஸாப்ட். FAT அமைப்பு அவர்களுக்கு சொந்தமானதால் அதை உபயோகிக்க கப்பம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டது. அதுவே FAT பரி மென்பொருள் காப்புரிமைப் பெற்றிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, 'எந்த தளத்திலும்' இயக்கியிருக்கலாம் .

(ஆ) மென்பொருள் எப்படி இயங்குகிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து கற்றுக்கொள்ளலாம். தேவைக்கேற்ப மாற்றியும் அமைத்துக்கொள்ளலாம். இதற்கு வசதி செய்ய மென்பொருளின் நிரலை (source code) உபயோகிப்பவர் பெற்றுக்கொள்ளலாம்.
(எ.கா) உங்க மனைவிக்கு அழகான புடவை ஒன்று வாங்கிவருகிறீர்கள். ஆனா பாருங்க உங்க இரண்டு பெண் குழந்தைக்கும் அந்த நிறம் தான் பிடிச்சிருக்கு. உங்க மனைவியும் சரி குழந்தைங்க மகிழ்ச்சிதானே முக்கியம், புடவையை ரெண்டா வெட்டி இருவருக்கும் பாவாடைச் சட்டை தைக்கலாம் என்று யோசனை குடுப்பாங்கதானே? அப்படி ரெண்டா வெட்டினா நல்லி குப்புசாமிச் செட்டியார் உங்க
வீட்டு கதவைத்தட்டி, 'நான் புடவைதான் வித்தேன், அதைப் பாவாடை சட்டையா மாற்ற உங்களுக்கு உரிமையில்லை, எங்ககிட்ட வந்து கொடுத்தா நாங்கதான் வெட்டி தைத்து தருவோம், அதுக்கும் தனியா பணம் கொடுத்துரணும்' என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் இன்றைக்கும் கணினி மென்பொருள் துறையில் நடைபெறுகிறது.

(இ) மென்பொருளை நகலெடுத்து மற்றவர்க்கு வழங்க உரிமை.
(எ.கா) ஒரு பெரிய மூட்டை அரிசி வாங்கி மற்ற வியாபாரிக்கோ, உபயோகிப்பாளனுக்கோ பொட்டலம் கட்டி விற்கலாம். சும்மா கிடைக்கிற தண்ணீரை போத்தலில் அடைத்து, கொஞ்சம் சுவை சேர்த்து கோலா விற்பதைப் போன்றது.

(ஈ) மென்பொருளை மேம்படுத்தவும், அதை மக்களுக்கு வழங்கி இயக்கம் வளர பாடுபடுவது. அவ்வாறு வெளியிடப்படும் தயாரிப்பின் நிரலும்
பொதுவில் இடவேண்டும்.

இந்த சுதந்திரங்களும் உரிமைகளும் லட்சலட்சமாய் செலவு செய்தாலும் சன், ஐபிஎம், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மென்பொருட்களில்
கிடைக்காது.

ஆதலினால் காப்புரிமை பெறுவீர் - GNU Licences
------------------------------------------------------------

பரிமென்பொருள் என்றாலும் அதற்கும் காப்புரிமை உண்டு. "யோவ், முதல்ல பணம் வசூல் பண்ணலாம்ணே, இப்போ காப்புரிமையும் இருக்குன்னு சொல்ற... என்னப்பு சின்ன புள்ள விளையாட்டா உனக்கு, எனக்கு நிறைய வேல இருக்குது, உக்கும்..." என்று நீங்க புலம்புவது என் காதில் விழாமலில்லை. சும்மா கொஞ்சமே கொஞ்சம் காப்புரிமைபற்றி. சரியா?

மூடிய நிரல் மென்பொருள்களை உபயோகித்தவர்கள் அதை இயக்கத் துவங்குவதற்கு முன் பல ஒப்பந்தங்களுக்கும், காப்புரிமைகளுக்கும் 'ஆம்' என்று சொடுக்கித்தான் உள்ளே நுழையமுடியும். ஆனால் அந்த காப்புரிமைகளுக்கும் பரி / திறந்த நிரல் மென்பொருள் காப்புரிமை ஒப்பந்தங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளது. அடிப்படை வேறுபாடு, திறந்த நிரல் காப்புரிமை, சட்டங்களைப் பயன்படுத்தியே பயன்படுத்துபவரின் உரிமைகளை பாதுகாக்கும் கெட்டிக்காரத் திட்டம். மூடிய நிரல் காப்புரிமை பெரும் நிறுவனங்களின் பணப்பேழையைக் காக்கும் கவசங்களே. அந்த ஒப்பந்தங்கள் மேற்குறிப்பிட்ட நான்கு சுதந்திரங்கள் உபயோகிப்பாளனுக்கு இல்லை, அது மீறப்பட்டால் சட்டத்தின் துணைகொண்டு தண்டிக்கப்படலாம் என எச்சரித்து நம்மை (தங்கள் தயாரிப்பிற்கும் நிறுவனத்திற்கும்) அடிமைப்படுத்தும் சாசனம்.

க்குனூவும் பல வகையான காப்புரிமைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அவைகள் எதுவும் அடிமைச் சாசனங்களல்ல, சுதந்திரப் பிரகடணம். பரிமென்பொருளின் வளர்ச்சிக்கு உரமூட்டவும் உபயோகிப்பவனின் சுதந்திரத்தை காக்கவும் க்குனூவின் காப்புரிமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆர்வலர் ஒருவர் பரி மென்பொருள் தயாரிப்பு ஒன்றை திருத்தி மேம்படுத்துகின்றார் எனக் கொள்வோம். அதை அவர் மூடிய நிரலாய் மாற்றி விற்பனை செய்ய முடியாது. அந்த மேம்படுத்தப்பட்ட தயாரிப்பும் க்குனூவின் அதே திறந்த காப்புரிமையுடன் வெளியிடப்படவேண்டும். இதனால் பெரும் நிறுவனங்கள் பரி மென்பொருட்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தடுக்கப்படுகிறது.

பார்த்தீர்களா, இந்த ஒரு எளிய கட்டுப்பாட்டினால் பரிமென்பொருள் தயாரிப்பும் ஊக்குவிக்கப்படுகிறது, அதே சமயம் பெரும் முதலைகளின் கைகளில் சிக்காமலும் காப்பாற்றப்படுகிறது. க்குனூவின் அனைத்து வகை காப்புரிமைகளும் இதன் அடிப்படையில் அமைந்தவைதான்.


பறி, பரி :
-----------
கறவைமாடுகளாய் வாடிக்கையாளர்களை பாவித்து தன் உரிமத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்த நிறுவனங்களுக்கு இந்த உரிமம் ஒரு பெரும் சவால்.

சரி ஆனாலும் பரி மென்பொருளில் ஒரு சில நடைமுறைசிக்கல் உள்ளது. அது ஆணைமூலத்தில் சிறிய மாற்றத்தை செய்து வேறு பெயரில் யார் வேண்டுமானாலும் பொட்டலம் கட்டி தங்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய முடியும் . அவ்வாறு விற்கப்பட்ட தொகையிலிருந்து மூலத்தை தயாரித்தவனுக்கு ராயல்டி கொடுக்க வேண்டியதில்லை. அவ்வாறு ஒரு சிறுதொகையை தயாரித்தவனுக்கு தருவது விற்பனை நிறுவனங்களின் நெறியைச் சார்ந்தது, கொடுக்கவேண்டும் என்று சட்டம் இல்லை. இன்று பரிமென்பொருட்களை அவ்வாறு விற்பனை செய்து வரும் ஐபிஎம் (IBM) , ரெட் ஹாட் (Redhat), நோவெல் (Novell), சன் (Sun) போன்ற நிறுவனங்கள் பரிமென்பொருட்களையும் அதற்கான சேவைகளையும் விற்பனை செய்கின்றனர். அதற்கு கைமாறாக பரிமென்பொருள் தயாரிப்பிற்கு இயந்திர, பண உதவி அளிக்கின்றன. அதேபோல தன் நிறுவங்களின் மூலம் அவ்வாறு பரிபொருள் தயாரிக்க மென்பொருள் எழுத்தர்களை தன் செலவில் சம்பளம் கொடுத்து அமர்த்துகிறது. (பரிமென்பொருளின் தயாரிப்பு பாதை தங்கள் கைவிட்டு போகாமல் இருக்கவே இவ்வாறான மென்பொருளாளர்கள் நியமிக்கப்படுவதாக வேறு சிலர் குறை கூறுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது!).

ஆனாலும் கணினி பயன்படுத்தும் ஒரு சராசரி நபரும் சிறுதொழிலில் கணினிக்காக பல கோடி வாரியிரைக்க முடியாத சிறு நிறுவங்களும் பல சலுகைகள் அடைந்திருப்பதே உண்மை. ஒரு மென்பொருள் உரிமத்திற்காக ஆயிரக்கணக்காய் செலவு செய்யுமுன்னர் அதே தயாரிப்பு இலவசமாய் கிடைக்கிறதா என்று தேடிய பின்னரே வாங்குகின்றனர். அல்ல சேவைதான் முக்கியம் என்று முடிவுசெய்பவர்கள், நான் முன்பு குறிப்பிட்ட பொட்டல நிறுவனங்களை அணுகி சேவையை மிகக்குறைந்த விலையில் பெற்று கொள்கின்றனர். அதனால் மைக்ரோசாப்ட், அடோபெ (Adobe), ரியல் சிஸ்டம் (Real Systems), மாக்ரோ மீடியா (Macromedia) போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் விலை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

லினக்ஸ்:
----------
பரிமென்பொருளைப் பற்றிய அறிமுக கட்டுரையில் லினக்ஸ் பற்றி எழுதாதது, திருப்பதிக்கு போய் லட்டு வாங்காமல் வருவதைப் போன்றது. லினஸ் டொர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்பவர் பின்லாண்டு நாட்டில் ஹெல்சின்கி பல்கலைக்கழக மாணவராய் இருந்தபோது மினிக்ஸ் (Minix) என்ற யுனிக்ஸ் போன்ற இயங்குதளத்தின் எளிமையால் ஈர்க்கப்பட்டார். மினிக்ஸைக் காட்டிலும் ஒரு வலுவான வடிவமைப்புடன் லினக்ஸ் (Linux) என்ற பெயரில் 1994ஆம் ஆண்டு வெளியிட்டார். ஒரு இயங்குதளம் சரியாய் வேளை செய்ய கெர்னல் (Kernel) என்னும் 'மூல இயங்கி' மனித மூளையைப்போல அதன் உள்ளிருந்து செயல் பட வேண்டும். லினஸ் அந்த கெர்னலைத்தான் லினக்ஸ் என்ற பெயரில் 1994ஆம் ஆண்டு வெளியிட்டார். அவர் எழுதிய அந்த கெர்னலின் ஆணைமூலத்தை ஒரு கட்டுரை நோட்டில் 40 பக்கங்களில் குறுக்கி எழுதி விட முடியும். அவர் எழுதிய இந்த லினக்ஸ் கெர்னலை ஒரு இயங்குதளமாய் மாற்ற ஏற்கனவே க்குனூ வெளியிட்டிருந்த மற்ற மென்பொருட்களையும் லினிக்ஸில் இயங்குமாறு மாற்றி அமைத்தார். லினஸ் தன் தயாரிப்பை அறிவித்தவுடன் அனைவரும் மாலை சூடி கொண்டாடி விடவில்லை. முதலில் ஒரு மாணவனின் பொழுதுபோக்கு முயற்சி என்ற அளவிலேயே நிராகரித்தார்கள். ஆனால் மற்ற புதுப்புது மென்பொருட்தயாரிப்புகள் லினக்ஸில் இயங்குமாறு மாற்றி வெளியிடப்பட்டது லினக்ஸின் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இன்று மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளத்திற்கு அடுத்து அவர்களுக்கே சவால் விடக்கூடிய ஒரே இயங்குதளம் லினக்ஸ் மட்டுமே. மேலும் ரெட் ஹாட், மாண்ட்ரேக் (Mandrake) போன்ற
நிறுவனங்கள் லினக்ஸை சற்றே அழகுகூட்டி சேவையுடன் விற்பனை செய்வதும் அதன் வளர்ச்சிக்கு சாட்சியங்கள்.


பகையா பாசமா?
--------------------
இதையெல்லாம் கண்ட ஐபிஎம், சன் போன்ற நிறுவனங்கள், பரிபொருள் தயாரிப்புகளோடு போட்டியிடுவதைக் காட்டிலும் அதை அரவணைத்து கொண்டாலே தங்களால் நிலைக்க முடியும் என்பதை அறிந்து பரி மென்பொருத்தயாரிப்பில் தங்கள் நிறுவனத்தையும் ஈடுபடுத்திக்கொண்டார்கள். இந்நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள தங்கள் தயாரிப்பை திறந்த ஆணைமூலமாய் அறிவித்து விடுவார்கள். அதன் மூலம் உலகெங்கும் உள்ள திறந்த ஆணைமூல ஆர்வலர்கள் அதை மேலும் சீர்படுத்துவர். அவ்வாறு சீர்படுத்தப்பட்ட
வெளியீடுகளோடு தங்களின் தயாரிப்பை இணைத்து ஒரே பொட்டலமாய் விற்று விடுவார்கள். ஐபிஎம் மின் எக்லிப்ஸ் (Eclipse), நெட்ஸ்கேப்பின் மொசில்லா (Mozilla) போன்றவை இந்த உத்தியை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள்.


பரி பொருள் திறந்த நிரல் வேற்றுமை:
---------------------------------------------

எரிக் ரேமண்ட் (Eric S. Raymond), ப்ரூஸ் பெரன்ஸ் (Bruce Perens) ஆகியோர் பரி மென்பொருள் என்பது விற்பனை நிறுவனங்களுக்கும், உபயோகிப்பவருக்கும் குழப்பமளிப்பதாய் அறிந்து திறந்த நிரல் அறக்கட்டளையை (Open Source Foundation) 1998ன் நிறுவினர்.
திறந்தநிரல் ஆணைமூலம் பத்து கட்டளைகளை முன்நிறுத்தி துவங்கப்பட்டது. பரி பொருள் அறக்கட்டளைக்கும் திறந்த நிரல் ஆணைமூல அறக்கட்டளைக்கும் மிகச் சிறிய வேறுபாடே உள்ளது. இரண்டு அமைப்புக்களும் ஒரே நோக்கத்திற்காகவே செயல்படுகின்றன, ஆனால் அவர்களின் புரிதலிலும் அணுகுமுறையிலும்தான் சிறிய வித்தியாசம். திறந்த நிரல் ஆணையத்தை பொருத்தமட்டில் மூல நிரல் திறந்து அனைவருக்கும் எளிதில் கிடைக்கப்பெறுவது ஒரு நடைமுறை நிகழ்வு. பரிநிரல் ஆணையம் அதை ஒரு சமூக நிகழ்வாய் காண்கிறது. திறந்த நிரல் ஒரு தயாரிப்பு முறை, பரி பொருள் ஒரு சமூக முன்னேற்ற கழகம். திறந்த ஆணைக்குழுவிற்கு மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தினரின் சொந்த உபயோகிப்பாளரை அடிமையாக்கும் தயாரிப்புகள் குறைந்தபட்ச தீர்வு. பரிமென்பொருள் ஆணையத்தை பொறுத்தமட்டில் அது ஒரு சமூக அவலம், அதற்கு பரி மென்பொருள் மட்டுமே தீர்வு.


பரி மென்பொருட்களின் சித்தாந்தத்தை அவர்களின் உரிமத்தை பற்றி விவரிக்கும் போது பார்த்தோம். இப்போது திறந்த ஆணைமூலத்தின் பத்து கட்டளைகளைப் பற்றி பார்க்கலாம்.

பத்து கட்டளைகள்- The Ten Commandments:
--------------------------------------------------------
திறந்த நிரல் என்பது வெறும் நிரலை உபயோகிப்பவர்களுக்கு கொடுத்துவிடுவது இல்லை. ஒரு திறந்த நிரல் தயாரிப்பு கீழ்கண்ட பத்து கட்டளைகளுக்கு இணங்கி வெளியிடப்படவேண்டும். அப்போதே அது திறந்த நிரல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்படும்.

(அ) இலவசமாய் எத்தனை முறையும் எந்த வகையிலும் வழங்கிட உரிமம். ஒரு தயாரிப்பை முழுமையாகவோ, பகுதியாகவோ, ஒன்றிற்கு மேற்பட்ட தளங்களிலிருந்து பெறப்பட்ட கூட்டாகவும் வெளியிடலாம்.
(ஆ) மூல நிரல் : ஒரு தயாரிப்பின் வெளியீட்டுடன் அதன் நிரல் கட்டாயம் இணைக்கப்படவேண்டும். மேலும் உபயோகிப்பவர் அதை தன் எண்ணப்படி மாற்றியமைக்க அதை திரும்ப கட்டுமானம் செய்ய தேவையான குறிப்புகளும் இணைக்கப்படவேண்டும்
(இ) வழங்கப்பட்ட தயாரிப்பு மாற்றத்திற்கும் முன்னேற்றதிற்கும் தடைவிதிக்காதிருக்க வேண்டும்.
(ஈ) மேற்கூறியபடி மாற்றப்பட்ட நிரலும் திறந்துவிடப்படவேண்டும். அவ்வாறு மாற்றத்திற்கு உட்பட்ட தயாரிப்பும் மூல நிரலின் அதே உரிமத்தில் வெளியிடப்படவேண்டும்.
(உ) தனிப்பட்ட நபருக்கோ குழுவுக்கோ எதிராக பாராபட்சம் காட்டப்படக்கூடாது.
(ஊ) தனிப்பட்ட துறைக்கு பாராபட்சமாய் இருக்கக்கூடாது. மேலும் ஒரு திறந்த நிரல் தயாரிப்பு ஒரு துறைக்கு மட்டுமே திறந்த நிரலாய் வெளியிடப்படக்கூடாது. எந்த துறையும் எந்த வகையிலும் திறந்த நிரல் தயாரிப்புகளை உபயோகித்து மறு வெளியீடு செய்யலாம்.
(எ) தயாரிப்பிற்கான உரிமம் மறு வெளியீடு செய்ய முனைபவர் அனைவரையும் உள்ளடக்க வேண்டும். ஒவ்வொரு மறு வெளியீட்டாளருக்கும் தனித்தனி உரிமம் வெளியிடப்படவேண்டிய அவசியமில்லை.
(ஏ) உரிமம் மற்ற ஒரு தயாரிப்பை சார்ந்து இருக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக விலை அதிகமான ஒரு தயாரிப்பை வாங்குபவர்களுக்கு மட்டுமே மற்றொரு தயாரிப்பு இலவசம் என்று அறிவித்தால் அது திறந்த நிரலாகாது.
(ஐ) உரிமம் மற்ற தயாரிப்பிற்கு தடையாய் இருக்கக்கூடாது. அதாவது ஒரு திறந்த நிரல் மென்பொருளுடன் வழங்கப்படும் (அல்லது விற்கப்படும்) மற்ற தயாரிப்புகள் திறந்த நிரலாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.
(ஒ) உரிமம் எந்த தொழில் நுட்பத்தையும் சார்ந்திருத்தல் கூடாது.

இந்த உரிமங்கள் க்குனூவின் நான்கு விதிமுறைகளைக்காட்டிலும் இளகியதாய் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த பத்து கட்டளைகள் 1998ல் வெளிவந்த பின்னரே ஐபிஎம், நெட்ஸ்கேப் போன்ற நிறுவனங்கள் திறந்த நிரலின் பக்கம் தலைசாய்க்க உதவியது.



குருடோ நொண்டியோ, குழம்பு ருசியா?
------------------------------------------------
பரி மற்றும் திறந்த நிரல் ஆணைமுலங்களுக்கிடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் தாங்கள் ஒத்த கருத்துள்ள விடயங்களில் இணைந்தே செயல்படுகிறார்கள். இந்த இரண்டு அறக்கட்டளைகளின் செயல்பாட்டினால் வாடிக்கையாளனுக்கு பல இயங்கிகளும் செயலிகளும் வழங்கிகளும் எளிதில் இலவசமாகவோ, அல்லது குறைந்த விலையிலோ கிடைக்கிறது. லட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து சலித்திருந்த மென்பொருள் உபயோகிக்கும் நிறுவனங்களும் இன்று தாமே முன்வந்து இந்த இணையங்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டி அன்பளிப்பாக வாரி இரைக்கின்றனர். வலியவரிடம் பெற்று வறியவனுக்கு வழங்கும் நவின தேவதைகளாய் இவ்வாணையங்களும் செவ்வனே பணி செய்கின்றனர்.

தமிழுக்கு என்ன பயன்?
---------------------------
திறந்த ஆணைமூலம் பரி பொருள் வளர்ச்சி பற்றி அறிமுகமாகிவிட்டது, ஆனால் அதனால் தமிழற்கும் தமிழுக்கும் என்ன பயன்?

இதோ அதற்கு பதில்: லினக்ஸ் போன்ற ஒரு இயங்குதளத்தை ஒரு நிறுவனம் இன்று துவங்கி தயாரிக்க நேர்ந்தால் எத்தனை செலவு ஆகும் என்று தெரியுமா? அதிகமில்லை நண்பர்களே சில பில்லியன் டாலர்களே. அதனால் அவ்வளவு செலவு செய்து தயாரிக்க எந்த முட்டாளும் இன்று முன்வரமாட்டான். இன்று சந்தையில் இலவசமாய் கிடைக்கும் பல செயலிகளை தயாரிக்கவும் இதைப்போல பில்லியன் பில்லியனாய் கொட்டவேண்டும். அதனால் நம்மால் தமிழுக்கு தனியாய் ஒரு இயங்குதளத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம்.

மேலும் ஒரு புதிய தயாரிப்பு வெளியிடும் போது அதன் தமிழ் மொழியாக்கத்திற்கு அந்த நிறுவனம் மனது வைக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதை அவர்கள் மனது வைத்து மொழிபெயர்ப்பதற்குள் அடுத்த வெளியீடு வந்திருக்கும். நாமே அதை தமிழில் மொழிமாற்றம் செய்ய நம்மிடம் மூல நிரலும் கிடைக்காது, உரிமமும் வழங்கமாட்டார்கள். இங்கேதான் திறந்த நிரலின் தயவு நமக்கு வேண்டும்.


கணினியைப் பொறுத்தமட்டில் அதற்கு எந்த மொழியும் தெரியாது. அதற்குள் எல்லாம் பூஜ்யங்களும் ஒன்றுகளும்தான். எந்த மொழியாக இருந்தாலும் கணினி அதை பூஜ்யமும் ஒன்றுமாய் மாற்றியே சேமிக்கிறது. நாம் ஒரு கணினியை இயக்கும் போது அதில் காணும் எழுத்துக்கள் யாவும் ஒரு கோப்பில் இருந்து பெறப்படுகிறது. அந்த கோப்பில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தமிழ் எழுத்துருக்களில் மாற்றி அமைத்துவிட்டால், தமிழ் கணினி தயார் (நான் எளிதாக விளக்கிவிட்டேனே ஒழிய அதை செய்வதற்கும் சிரமமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு தயாரிப்பை முதலில் இருந்து துவங்குவதை ஒப்பு நோக்கும் போது இது மிகவும் எளிய செயலே!). அவ்வாறு அக்கோப்பு வாக்கியங்களை மாற்றி அமைத்துவுடன் ஆணைமூல நிரலை மீண்டும் தொகுக்க வேண்டும் (re-compile). இதுவெல்லாம் மூல நிரல் இருந்தாலே சாத்தியம். அதனால் தான் திறந்த நிரல் மென்பொருட்கள், தமிழில் கணினி என்னும் நம் கனவை நோக்கி நாம் நகரும் பாதையாய் இருக்கிறது. நம் அரசாங்கம் பில்லியன் கணக்கில் செலவு செய்யத்தேவையில்லை, ஏற்கனவே திறந்த நிரல் ஆணைமூலதிட்டத்தில் கிடைக்கும் இலவச மென்பொருட்களை தேர்ந்தெடுத்து அதை அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்து குறைந்த விலையில் தமிழ் கணினி வழங்க ஏற்பாடு செய்யலாம்.


இப்போதும் தமிழா (www.thamizha.com), தமிழ் ஓப்பன் ஆபீஸ் (ta.openoffice.org), தமிழ் லினக்ஸ் (www.tamillinux.org), ழ-கணினி (www.zhakanini.org) போன்ற முனைவர்கள் அரசாங்கத்தின் எந்த உதவியுமின்றி (ழ-கணினி - தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் மானியம் பெற்றது) தங்களின் சொந்த செலவில் தமிழருக்கு இலவச தமிழ் கணினி மென்பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இந்த பரி / திறந்த ஆணையத்திற்கு நாம் பல வகையில் உதவி செய்ய முடியும். காபிக் கோப்பை, மேற்சட்டை போன்ற தயாரிப்புக்ளை வாங்கி அவர்களை ஊக்குவிக்கலாம். அதே போல நேரமிருக்கும் கணினி மென்பொருள் தயாரிப்பில் அனுபவம் மிக்க தமிழர்கள் இன்னும் மொழிபெயர்க்கப்படாத உபயோகமுள்ள தமிழ் செயலிகளை மொழிபெயர்க்க உதவலாம். மேலும் வியாபார ஆர்வமுள்ள இளைஞர்கள் தமிழ் மென்பொருள் அடங்கிய கணினியை தமிழ் பேசும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்து விற்பனை செய்து லாபமும் அடையலாம். அனைத்திற்கும் மேலாக பரி / திறந்த மென்பொருள் தயாரிப்புகளை முடிந்தவரை உபயோகித்து பழகவேண்டும். ஏனைய பணம்பிடுங்கி தயாரிப்புகளைவிட இந்த மென்பொருட்கள் அதிகமான வசதிகளை கொண்டிருப்பதாக பலரும் சாட்சியம் அளிக்கிறார்கள். உங்கள் நிறுவனமோ, நண்பரோ கணினி வாங்க உத்தேசித்திருந்தால் அவர்களுக்கு இந்த கட்டுரையை படிக்க கொடுங்கள், பரி மென்பொருள் தயாரிப்புகளை சிபாரிசு செய்யுங்கள்.

நன்றி:
------
http://www.fsf.org
http://www.opensource.org
http://www.catb.org/~esr/faqs/linus/
http://www.linux.org/info/index.html

இணைப்புரை:
----------------
நிதமும் நாம் உபயோகிக்கும் மென்பொருட்களும் அதற்கு இணையான திறந்த நிரல் மென்பொருட்கள்

மைக்ரோ சாப்ட் ஆபிஸ் => ஒப்பன் ஆபிஸ் (www.openoffice.org)
IIS வழங்கி (Internet Server) => அப்பாச்சி (www.apache.org)
இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி (Internet Explorer) => •பயர் •பாக்ஸ் (www.mozilla.org/products/firefox/) உலாவி
விண்டோஸ் இயங்குதளம் => லினக்ஸ் இயங்குதளம் (www.linux.org)
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் (Outlook Express) => மொஸில்லா இமெயில் (www.mozilla.org)
ஆரக்கிள் (Oracle), SQL தகவல்தளம் => மை சீக்யுவல் (www.mysql.com)
யாஹ¥ தூதுவன் (Yahoo Messenger) => கெய்ம் (gaim.sourceforge.net)
வின் ஜிப் (WinZip) => 7- ஜிப் (www.7-zip.org)

மேலும் மற்ற செயலிகளை கிழ்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்.

http://www.chlug.org/oss_equiv.php
http://www.asiaosc.org/enwiki/page/Open_source_replacements_for_proprietary_software.html


------

இற்றைப்படுத்தப்பட்டது:

மேலே குறிப்பிடப்பட்டிருந்த உரல்கள் செயல்படவில்லை எனபதை அன்பர் ஒருவர் அறிவுறுத்தியிருந்தார், சில வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையாகையால் உரல்கள் செயல்பட முடியாத சாத்தியங்கள் எனக்கு மறுபதிக்கும் போது தோன்றவில்லை. சுட்டிக்காட்டியவர்க்கு நன்றி!

நிதமும் நாம் உபயோகிக்கும் மென்பொருட்களும் அதற்கு இணையான திறந்த நிரல் மென்பொருட்களின் பட்டியல்:

http://whdb.com/2008/the-top-50-proprietary-programs-that-drive-you-crazy-and-their-open-source-alternatives/

http://en.wikipedia.org/wiki/List_of_open_source_software_packages

மேலும் Sourceforge.net தளத்திற்கு சென்று தேடு பொறி உதவி கொண்டு தேடினால் பல அறிய சீரிய மென்பொருட்கள் கிடைக்கும்!

காசேதான் கடவுளடா!

அமெரிக்காவில் கோவில்களை கட்டிக்குவிக்கிறோம். கோயிலில்லாத ஊரில் குடிபுகாதே என்று சொன்னதை வேதமாக கருதி, குடிபுகுந்த ஊரிலெல்லாம் கோவில் கட்டிக்குவிக்கிறோம். கோவில்கள்தான் எங்களின் நாளைய பொலிடிகல் சென்டராக மாற்றிவருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் வெளிநாட்டுகாரனுக்கு அர்த்த ராத்திரிகளில் ஆணி புடுங்கியும், செய்த தப்புக்கணக்கை அதிகோணலாக்கும் ஆடிட்டராகவும், ஏதோ ஒரு மருத்துவமனையில் கிழட்டு hypochondriac அமெரிக்கர்களின் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துகொண்டே இன்முக பதில்கள் சொல்லியும் சுயத்தை இழந்த எங்களின் இறந்த ஈகோவைத்தூக்கிநிறுத்த பிரசிடண்ட், ஜெனரல் செக்ரட்டரி, போர்ட் ஆஃப் டரஸ்டி போன்ற பதவி பந்தாக்கள் தேவைப்படுகிறது. அதற்காகவே கோவில்களை உருவாக்குகிறோம். எங்கள் ஈகோவைக்காட்டிலும் இருமடங்குடைய பிரம்மாண்ட கோவில்களை உருவாக்குகிறோம். எங்கள் மனைவிமார்கள் எங்களுக்கு தெரியாமல் அனுப்பிய பணத்தில் மாமனார்/மாமியார் நல்லி குப்புசாமி செட்டியார் கடையில் தீபாவளி தள்ளுபடியில் வாங்கித்தரும் 'காஞ்ஜிபுர' பட்டு புடைவையையும், சேட்டு மாப்பிள்ளையைப் போல இருப்போம் என்ற கனவில் வாங்கி ராமராஜன் மாதிரி எங்களை தனித்துவமாய் மிளிரச்செய்யும் குர்த்தாக்களையும் பெருமையாய் அணிந்து மற்றவர்களுக்கும் காட்ட கோயிலுக்கு போவது எங்களுக்கு அவசியமாகிறது.


அமெரிக்க கோயில்கள் ஒரு பணம் தயாரிக்கும் இயந்திரம் என்பதை பல இந்திய (படிப்பறிவில்லாத ரெசிடண்ட் இண்டியன்ஸ் என்று வாசிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்) மக்கள் அறிவதில்லை. மல்டி மில்லியன் டாலர் கையிருப்பு வைத்திருக்கும் அமெரிக்கர்களுக்கே வீட்டுக் கடன் வாங்குவது சிரமமாய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்கூட கோவில் கட்ட மில்லியன் மில்லியனாய் பணம் இறைக்க அமெரிக்க வங்கிகள் வரிசைகட்டி ஏலம் கோரி நிற்பதாக ஹேஸ்யங்கள் பல உண்டு. உண்டியல் கலெக்‌ஷன் தவிர ஆயுஷ்ஹோமம், ம்மிருதுஞ்ஜய ஹோமம், கண்பத் ஹோமம், ஸ்ரீசக்ர சுதர்ஷண ஹோமம், ஸ்ரீ ஷுக்த ஹோமம், சத்யநாரயண பூஜா, வாஹன பூஜா, க்ரஹப்பிரவேஷா, அஷ்டோத்தரம், ச்ஹாலிசா, ஆரத்தி என்று பல வழிகளில் பணம் செய்து கடனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டி முடித்துவிடுவார்கள் என்று அமெரிக்க வங்கியினர் ரிஸ்க் அனாலிசிஸ் செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. நாங்களும் கோயில் கடன் அடைபட்டதும் அதை விரிவாக்க மீண்டும் கடன்வாங்கி இன்னும் நிறைய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து எங்கள் பத்தியையும் கோயில் கல்லாக்களையும் விஸ்தாரமாக்குகிறோம்.


ஊரிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து சென்று திருப்பதியைவிடவும், தில்லையைவிடவும் இங்கு அர்ச்சகர்கள் யாருக்கும் புரியாத மந்திரத்தை அழுத்தமாக உச்ச்சரிப்பதை பெருமையாய் காட்ட எங்களுக்கு கோவில் தேவை என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. உடுப்பி உணவகத்தில் தண்ணீரின் அடர்த்தியுடன் சாம்பார் போன்ற ஏதோ ஒரு வஸ்துவுடன் 7.45 டாலருக்கு வழங்கப்படும் அதே தரத்துடன் ஏன் அதைவிட சற்றே தரமான பொங்கல், சாத்தமுது, இறக்குமதி செய்யப்பட்ட MTR பொடியில் தயாரித்த வறுத்த வேர்க்கடலை சேர்த்த பாசுமதி அரிசியில் தயாரான புளியோதரை, யாரோ கன்னட/தெலுகு பத்தகோடி சத்யநாரயணா பூஜைக்கு தயாரித்த நெய்யையும் திரட்சைமுந்திரியையும் தேவைக்கு அதிகமாக சேர்த்தும் காய்ந்த கேசரி, வழிதவறி வந்த யாரோ நார்த் இந்தியன் விட்டுச்சென்ற சின்ன பூந்தியில் செய்த லட்டு என்று எல்லாம் கலந்தடிக்கும் பாக்யத்திற்காவும் கூட கோயில் கட்டுகிறோம். ஊரில் சிவராத்திரிக்கு சன் டிவியில் திராபைப்படமான ‘சச்சின்' பார்த்துக் நீங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் 108 சிவலிங்களுக்கு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சந்தன அபிஷேகமும் வால்மார்ட்டில் வாங்கிய கொழுப்பு நீக்கப்பட்ட பாலாபிஷேகமும் செய்து ஸ்ரீ ருத்ரத்தை விடிய விடிய வாய்கிழிய எமக்கு அடுத்து அமர்ந்திருப்பவரை விட சற்றே நல்ல உச்சரிப்புடனும் தெம்புடனும் பாடுவதாகா பாவ்லா செய்வதற்குக் கூட எங்களுக்கு கோயில்கள் அவசியம்தான்.


நாராயணனின் மகள் ப்ரொமிற்கு யாரோ கருப்பனுடன் வந்திருந்ததை ஸ்டார்ட்-அப் கம்பெனி CTOவின் மகனுடன் சென்ற எங்கள் அந்திம்பேரின் மகள் சொன்னதையும், சென்னைக்கு அருகே உள்ள குக்கிராமத்திற்கும் அருகிலுள்ள பட்டிக்காட்டில் நாங்கள் 7 வருடங்களுக்கு முன்பு வாங்கிய 77.29 லட்சம் பெருமானமுள்ள மனைக்கு அருகில் இருந்த அதே அளவு மனை இப்போது 3.22 கோடிக்கு விலைபோவதையும், எதிர் வீட்டு கேத்தி எங்கள் தோட்டத்து டேலியாப் பூக்களையும் எங்கள் கருங்கூந்தலை வியந்ததையும், நெப்ராஸ்காவிற்கோ வயோமிங்கிற்கோ யுனிவர்சிட்டி டீன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததால் மட்டுமே மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியுட்டில் கிடைத்த இடத்தை மறுத்து பேச்சுலர்ஸ் டிகிரி படிக்க சென்றிருக்கும் மூத்தவன் பற்றியும், 2419 பேர் படிக்கும் பள்ளியில் 7 மாணவர்கள் உறுப்பினராக உள்ள மனக்கணிதம் மற்றும் எறும்பு சேமிப்பு டீமில் இளைய மகள் முன்னணியில் இருப்பதை பகிர்வதற்கும், சுதர்ஷனுக்கு வேலை போனதால் அவன் மனைவி அகிலா கே-மார்ட்டில் மணிக்கு 6.55 டாலருக்கு பொட்டலம் கட்டுவதை ரேஷ்மா பார்த்ததையும், ஒவ்வொரு முறையும் ரம்யா பாட்லாக் பார்ட்டிகளுக்கு தயிர்சாதத்தையே கொண்டுவரும் கஞ்சத்தனத்தையும் அதையும் கூட அவள் கணவர்தான் சமைக்கிறார் என்ற இரகசியத்தையும் உங்களிடம் தொலைப்பேசியிலா தெரிவிக்க முடியும்?


இது தவிர இந்தியாவிலிருந்தும், ஈழம், கரிபியன், ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் இருந்தும் அவ்வப்போது விசிட்டிங் தெரபி அளிக்கும் இண்டர்நேசனல் ஆன்மிக டாக்டர்களை அழைத்து தாய்மண் பாசத்தில் நொஸ்டால்ஜிக்காய் அலையும் மாமா மாமிகளையும் அவர்களின் ஹிப்-ஹொப் நவநாகரீக Dudes and Chiksஐ வேண்டாவெறுப்பாய் அமர்த்தி சம்பந்தமே இல்லாத கதைகளை சத்சங் என்ற பெயரில் ராவி, டண்டக்கு டண்டக்கு 5-D டால்பி இசையில் பஜனை பாடவைத்து நாங்கள் பத்தி பரவசத்தில் மிதந்து ஆடும் போதே உண்டியல் குலுக்கினாலும் அதிலும் டாலர்களை சொருகி, ஏதோ சான்ஸ் போன பாடகர் இலவசமாய் பாடிக்கொடுத்த இசைவட்டு, படிக்கவே மாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதிக் குவித்த பத்திக்குப்பைகள், இந்தியாவில் ஏதோ நோஞ்சான் குழந்தை கழிப்பிட வசதியற்ற கிராமத்தில் செய்த கைவினைப்பொருட்கள், பல கோணங்களில் அருள்பாலிக்கும் நான்கங்குல பித்தளை விக்கிரகங்கள் (அதவிட பெருசா இருந்தா உம்மாச்சி கண்ண புடுங்கிடும்) என்று அனைத்தையும் அநியாய விலைக்கு வாங்கிவிட்டு மாதா மாதம் எரிதங்களை அனுப்ப முகவரியையும் இமெயில் ஐடியும் கொடுத்தே டாட்டா காட்டி திருப்பி அனுப்புகிறோம்.


மற்றும் எங்கள் நிரிழிவு, இதயக்கோளாறு, சொத்து தகறாறு, திருமணம், பிள்ளைகள், நோய்கள், உறவுமுறை சிக்கல், தொழில், நீதி மன்ற விவகாரங்கள், வாஸ்த்து, பில்லி சூன்யம், மனச்சிதைவு இவ்வளவு ஏன் கான்சர் போன்ற அனைத்து மனித மலச்சிக்கலுக்கும் இஙகேயே ரெசிடண்ட் சாமியார்களையும் ஊக்குவிக்க தயங்குவதில்லை. அவ்வப்போது Little India வில் வரும் ஜார்ஜியாவைச்(?) சேர்ந்த ”டாக்டர் கமேண்டர் சித்தர் செல்வம்” மற்றும் லண்டனைச் சேர்ந்த “பீர் சையது சாஹேப்” அவ்ர்கள் எல்லாம் எங்களைப் போன்ற திக்கற்றவர்களுக்கு திசைக்காட்டும் மகர ஜோதிகளாய் அவதரித்தவர்கள் என்பதையும் எய்ட்ஸ் முதல் ENT நோய்கள் வரை சர்வ நோய் தீர்க்கும் சக்தி பெற்றிருக்கிறார்கள் என்பதையும் சத்தியமாய் நம்பும் புண்யாத்மாக்கள் நாங்கள். படித்ததாய் நம்பப்படும் நாங்கள் இவர்களை அன்றாடம் நாடி செழிப்போடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ்ந்து நோய்பல தீர்த்த இந்த மகான்களையும் அர்த்த புஷ்டியுடம் செழிப்படையச்செய்கிறோம்.

காசைக்கொடுத்து கடவுளை வாங்குகிறோம்!

******

சிக்கலில் செல்வம்:






பீர் சையது சாஹேப்:

http://mannat123.blogspot.com/2005/03/have-any-problems.html